Tuesday, July 19, 2011

பாலா பதறணும்... அமீர் அலறணும்! படபடக்கிறார் பவர் ஸ்டார்


பாலா பதறணும்... அமீர் அலறணும்!

படபடக்கிறார் பவர் ஸ்டார்
வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரிகளைப் புரட்ட முடியவில்லை. பல பக்கங்களிலும் லகலகவெனச் சிரித்துக்கொண்டு இருக்கிறார் சீனிவாசன்... 'பவர் ஸ்டார்’ சீனிவாசன்!
'லத்திகா’, 'இந்திரசேனா’, 'ஆனந்த தொல்லை’ என விளம்பரங்களில்  அநியாய அலப்பறை கொடுக்கும் பவர் ஸ்டாரின் லேட்டஸ்ட் மிரட்டல் அதிரடி... 'லத்திகாவின் வெற்றிகரமான 100-வது நாள்’ என மெகா ஃப்ளெக்ஸ். சமீப காலமாக கோடம் பாக்கத்தைக் கதறடிக்கும் புண்ணியவான் இவர்தான்!
அக்குபஞ்சர் மருத்துவராக மதுரையில் இருந்து கிளம்பி வந்து, பவர் ஸ்டாராகப் பரிணமித்த சீனிவாசனைச் சந்திக்கப்போனால், முரட்டுக் கூட்டம் மிரட்டுகிறது. ''ஐ.டி. கார்டு காட்டுங்க!'' என ஒன்றுக்குப் பத்து முறை பரிசோதிக்கிறார்கள். நான்கு, ஐந்து கட்டங்களைத் தாண்டித்தான் பவர் ஸ்டாரின் உதவியாளரையே சந்திக்க முடிகிறது. விசிட்டிங் கார்டு உள்ளே போக, அலறி அடித்து வெளியே வருகிறார் பவர்.
''எத்தனையோ பேர் என்னை வாழ்த்த வந்தாங்க சார். ஆனா, நீங்க நேர்ல வந்து வாழ்த்துவீங்கன்னு நினைக்கலை. இது போதும் சார் எனக்கு!'' என ஏதேதோ சொல்லி உருகத் தொடங்கிவிட்டார்.
''சார், நாங்க ஜாலியா ஒரு பேட்டி எடுக்கத்தான் வந்தோம்!'' எனச் சொல்ல, ''அப்படியா?'' என 'மாயி’ பட மாமனார் கணக்காக இழுவைபோட்டு, ''என்னோட 'லத்திகா’ 100 நாட்கள் தாண்டி ஓடியதை வாழ்த்தத்தான் வந்திருக்கீங்களோனு நினைச்சிட்டேன்!'' என்கிறார் அசடுவழிய.
''டாக்டர் சீனிவாசனும் பவர் ஸ்டார் சீனிவாசனும் சந்தித்தால்?'' என பேட்டியின் ஐடியா சொன்னதும், ''ஹாஸ்பிடலில் இருந்து கோட் எடுத்துட்டு வாங்கப்பா... அப்படியே என்னோட விக்கும்!'' எனக் கட்டளைகள் பறக்கின்றன.
'ரெடி ஸ்டார்ட்’ சொல்ல... சந்திப்பு களைகட்டுகிறது.
டாக்டர்: ''ஒரு டாக்டரா மக்கள் சேவை பண்ண வந்துட்டு, சினிமா பக்கம் போய் ஜிங்கிலி ஆட்டம் போடுறது நியாயம்தானா?''
பவர்: ''டாக்டரா மக்கள் சேவை பண்ணிக்கிட்டு இருந்தா, இந்நேரம் இத்தனை பத்திரிகைகள்ல மின்னி இருக்க முடியுமா? ஈரோட்டுக்குப் போனாக்கூட, 'ஏய்! நம்ம பவர் ஸ்டார்’னு எட்டி எட்டிப் பார்க்குறானுங்க. இந்த அளவுக்குப் பேரும் புகழும் கிடைக்குமா? லத்திகாவோட 100-வது நாளுக்கு எத்தனை பேர் வாழ்த்தினாங்க தெரியுமா? என்னதான் மருத்துவ உலகத்தில் மகத்துவங்களைப் படைச்சாலும், இந்த பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி கிடைச்சிருக்காதே!''
டாக்டர்: ''மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க... 'லத்திகா’ 100 நாள் ஓடுச்சா? இல்லே, ஓட வெச்சீங்களா?''
பவர்: ''இதில் மறைக்க என்ன இருக்கு? தானா ஓடுச்சுன்னு சொல்றதைவிட, நானா ஓட்டினேன்னு சொல்றதுலதான் எனக்கும் பெருமை. இன்னிக்கு படம் எடுக்கிறது சுலபம். ஆனா, தியேட்டர் கிடைக்கிறது சாதாரண காரியம் இல்லை. பெரிய பெரிய தயாரிப்பாளர்களே தியேட்டர் கிடைக்காமத் தவிக்கிறப்ப, கமலா, சாந்தி, மகாலட்சுமின்னு அத்தனை தியேட்டர்காரங்களையும் நான் காக்கா பிடிச்சுவெச்சிருக்கேன். போன ஆட்சியில என்னோட படங்களை முடக்கிப்போட, எப்படி எல்லாம் திட்டம் போட்டாங்க தெரியுமா? ஆனாலும், 'உனக்காக ஒரு கவிதை’, 'மண்டபம்’னு தொடர்ந்து ஹிட் கொடுத்தேன். இன்னிக்கும் 'லத்திகா’ படத்தைப் பார்க்க, ஒரு நாளைக்கு 40 பேருக்கு மேல வர்றாங்க. கடைசி ஒரு ஆள் வர்ற வரைக்கும் படத்தை ஓட்டுங்கனு சொல்லிட்டேன். 150-வது நாள் விளம் பரத்தைப் பக்கம் பக்கமாக் கொடுக் கப்போறேன். கோடம்பாக்கம் அன்னிக்குத்தான் வயித்தெரிச் சல்ல தீ பிடிக்கப்போகுது பாருங்க!''
டாக்டர்: ''நடிப்புங்கிற பேர்ல நீங்க பண்ற அட்ராசிட்டியைத் தாங்க முடியாம பலரும் தவிக்கிறதா பேச்சு இருக்கே?''
பவர்: ''தவிச்சாலும் சரி... தாக்குதல் நடத்தினாலும் சரி... எனக்கு பப்ளிசிட்டி தேவை. அதுக்காகத்தான் சினிமா உலகுக்கு வந்தேன். 'பணத்தை வெச்சுக்கிட்டு ஆட்டம் போடுறான்’னு பலரும் என்னைத் திட்டுறாங்களாம். சில பேர் என் போஸ்டரை வெறிச்சுப் பார்த்து, கிழிக்கிறாங் களாம். என்ன வேணும்னாலும் பண்ணட்டும். நான் எதுக்கும் வெட்கப்பட மாட்டேன். நான் நடிக்கிறது என் மனைவிக்கே பிடிக்கலை. மத்தவங் களுக்குப் பிடிச்சா என்ன... பிடிக் கலைன்னா என்ன? இன்னொரு விஷயம் தெரியுமா? என்னோட மூணு மகள்களில் ரொம்பப் பிரியமான பொண்ணு லத்திகா. அவங்க மேல உள்ள பாசத்துலதான் என் படத்துக்கும் 'லத்திகா’னு பேர் வெச்சேன். படத்தைப் பார்த்த நாள்ல இருந்து, லத்திகா என்கிட்ட பேசுறதே கிடையாது. இதுக்கு அப்புறமும் நான் நடிக்கிறேன்னா... என்னோட தில்லை நீங்க ரசிக்கணும்... வரவேற்கணும்... கொண்டாடணும்!''
டாக்டர்: ''சில பத்திரிகைகள்ல உங்களைப்பத்தி கிசுகிசுலாம் வருதே?''
பவர்: ''அதெல்லாம் நானா பரப்பிவிட்ட கிசுகிசு. அப்படியும் ஒண்ணு ரெண்டுதான் பேப்பர்ல வந்துச்சு. எத்தனை நடிகர்- நடிகை கள் கிசுகிசுவுக்காக ஏங்குறாங்கன்னு தெரியுமா உங்களுக்கு? 'அவரோடு கொஞ்சல்... இவரோடு கெஞ்சல்’னு வந்தா, அந்த வாரம் முழுக்க நம்ம போன் பிஸி. ரசிகனும் முக்கியமான விஷயமா நெனச்சு, மூளையைக் கசக்கிக்கிட்டு அலைவான். மார்க்கெட்ல நம்ம பேர் நிலைக்க ணும்னா, தாரை தப்பட்டைகள் கிழியுற அளவுக்குக் கிசுகிசுக்களைக் கிளப்பிக் கிட்டே இருக்கணும். அதே நேரம், அதுபத்தி யாராவது கேட்டா... எரிஞ்சு விழணும். அப்போதான் கிசுகிசுவுக்கு ஒரு கில்மா எஃபெக்ட் இருக்கும்!''
டாக்டர்: ''சரி, சினிமாவில் உங்களுக்கு என்னதான் இலக்கு?''
பவர்: ''ரஜினி சார் எப்போ ரிட்டர்ன் வருவார்னு ஆசையா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன். சூப்பர் ஸ்டாரா... பவர் ஸ்டாராங்கிற ஒரு போட்டியை உருவாக்கி, தமிழ் சினிமா உலகில் டெரரைக் கிளப்பணும். என்னோட அடுத்த படமான 'ஆனந்த தொல்லை’யை 'லத்திகா’வோட 150-வது நாள் அன்னிக்கு ரிலீஸ் பண்ணப்போறோம். அதுக்கு அடுத்த படம், 'ராணா’ என்னிக்கு ரிலீஸ் ஆகுதோ... அன்னிக்கு களத்துக்கு வரும். அதுல சி.பி.ஐ. ஆபீஸரா வர்றேன். ஸீனுக்கு ஸீன் பட்டாசு பறக்கும். 'லத்திகா’ ஓர் இயக்குநராகவும் என்னை ஜெயிக்கவெச்சிருக்கு. நானும் மதுரைக்காரன்தான். இப்போ வர்ற மதுரைக் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடுற கதைகள், என்கிட்ட டஜன் டஜனா இருக்கு. ஒவ்வொண்ணா ரிலீஸ் ஆகிறப்ப... பாலா பதறணும்... அமீர் அலறணும்... சசி இன்டஸ்ட்ரியைவிட்டே ஓடணும்!''
டாக்டர்: ''நேற்று வரைக்கும் திருமாவளவனோடு நெருக்கமா இருந்துட்டு, ஆட்சி மாறியதும் எம்.நடராஜன், ஓ.பன்னீர்செல்வம்னு சந்திப்பு நடத்தி இருக்கீங்களே... ஒழுங்கா டாக்டர் வேலையை மட்டும் பார்த்து இருந்தா, இப்படி எல்லாம் அல்லாட வேண்டிய அவசியம் இல்லையே?''
பவர்: ''அரசியல் வேறு, நட்பு வேறு! எம்.என். சார் எனக்கு அஞ்சு வருஷமாப் பழக்கம். ஓ.பி.எஸ். அமைச்சரான உடனே ஓடோடிப் போய் வாழ்த்து தெரிவிச்சேன். அடுத்து, அம்மாவைச் சந்திக்கவும் அனுமதி கேட்டு இருக்கேன்.
என் தலைமையில் என் ரசிகர்கள் ஒரு லட்சம் பேரை கார்டனுக்கு அழைச்சுட்டுப் போவேன். நம்பிக்கையானவங்களுக்கு அம்மா நிறைய செய்வாங்க. நாளைக்கே நான் சுகாதாரத் துறை அமைச்சர் ஆனாலும் ஆச்சர்யம் இல்லை. வெறும் டாக்டராவே இருந்தா, இப்படி எல்லாம் எதிர்பார்ப்புகளை எகிறவெச்சு சந்தோஷப்பட முடியுமா? புரொடக்ஷன்ல இருக்கும் நம்ம படத்தோட டிரைலர் பார்க்குறீங்களா?'' என்று கேட்டு ரிமோட் பட்டனைத் தட்டுகிறார்.
பஞ்சு மிட்டாய் மேக்கப், குருவிக் கூடு விக்குடன் 'பவர் ஸ்டார்’ முகபாவங்களைப் பிழிந்துகொண்டு இருக்க, அவரிடம் கெஞ்சிக் கதறிக்கொண்டு இருக்கிறார் ஒரு பெண்...
'கட்டின பொண்டாட்டியையே கட்டிவெச்சுக் கற்பழிச்சவன்தானே நீ... உன்கிட்ட எனக்கு என்ன நியாயம் கிடைக்கும்?’
ஏன், ஏன் இந்தக் கொலை வெறி பவர் ஸ்டார்?!

நன்றி: விகடன் 

No comments:

Post a Comment