Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, February 13, 2010

தப்பித்தல்(காதலில் இருந்து) !!

அது காதல் தான் நான் பதுங்கி கொள்ளவோ

தப்பிக்கவோ வேண்டும்
ஒரு பயங்கரக் கனவினைப் போல
அதன் சிறை சுவர்கள் பெரிதாய் வளர்கின்றன

கவர்ச்சி மிகுந்த முகமூடி மட்டும் மாறியிருக்கிறது
என்னுடைய தாயத்துகளாலும் உரை கற்களாலும்
என்ன பயன் ?
இலக்கியத்தின் பயன்பாடு தெளிவற்ற படிப்பு
கூர்ந்த கற்களால் ஆன வடக்கு நாடுகள் தம்
கடல்களையும், வாள்களையும் பாடுவதற்கு பயன்படுத்திய ஒரு
மொழிக்கான எனது பயிற்சி

நட்புகளின் அமைதி
நூலகங்களின் படியடிக்கூடங்கள்,சாதாரண பொருட்கள்,
பழக்கங்கள்,என் தாயின் இளம் காதல்
என் இறந்த முன்னோர்களால் வீசப்பட்ட போர் வீரர் தன்மையான நிழல்கள்
காலமற்ற இரவு,கனவின்,இரவின் சுவைகள்,?

உன்னுடன் இருத்தல் அல்லது உன்னுடன் இல்லாது இருத்தல்
என்பதைக் கொண்டுதான் நான் காலத்தை அளக்கிறேன்

இப்பொழுது நீர் ஜாடி
நீர் ஊற்றுக்கு மேலாக உடைந்து சிதறுகிறது

இப்பொழுது அந்த மனிதன்
பறவையின் பாடல் ஓசைக்கு உயர்கிறான்

இப்பொழுது ஜன்னல் ஊடாகப் பார்ப்பவர்களை
பிரித்தறிய முடிவதில்லை
ஆனால் இருள் அமைதியை கொணரவில்லை
அது காதல்தான், நானறிவேன்

உன் குரலைக் கேட்டதினால் உண்டான பதற்றமும்
ஆசுவாசமும்,நம்பிக்கையும்,ஞாபகமும்,
அடுத்தடுத்த தொடர்ச்சிகளில் வாழும் பயங்கரமும்.

நம் செயல்கள் அதன் தீர்மானிக்கப்பட்ட
வழியில் தொடர்கின்றன
அதற்கு ஒரு முடிவுண்டென்பது தெரியாது
நான் எனது அரசனை வாளால் வீழ்த்தினேன்
ஷேக்ஸ்பியர் தன் துன்பியல் நாடகத்தின் கதைத்
திட்டத்தை அமைக்க ஏதுவாய்

--ஹோர்ஜ் லூயி போர்ஹெஸ்

நன்றி:வார்த்தையின் ரசவாதம் -பிரம்மராஜன்

Sunday, December 13, 2009

மற்றுமொரு கவிதை…

நட்சத்திரங்களற்ற இரவில்
நிச்சலனமான ஆகாயமாய்ப்
பெருகும்
ஒற்றைக் கண்ணீர்த்துளி.
ரயில் பயணங்களில்
தண்டவாள ஒலிகளுடன்
ஒத்திசைந்து கிளர்த்தும்
என் ஆனந்தமான தனிமை.

நான் எழுத விரும்புகிறேன்
பின்னிரவின் அடர்ந்த கருமையிலோ
புலர்பொழுதின் வாத்ஸல்யமான கதகதப்பிலோ

துவேஷங்களற்ற என் கண்ணீர்த்துளி பற்றி
வாதைகளற்ற என் தனிமை பற்றி.

என்னிடம் எந்தப் புகாரும் இல்லை.

என் தனிமை மிகப் பிரத்யேகமானது,
எனது கண்ணீர்த்துளி போலவே.
அதற்கென்று ஒரு வாசமுண்டு,
ஒரு மொழியும்கூட.
சிறகுகளையத்த சுதந்திரத்தை
அது எனக்குத் தருகிறது.

ரகசியங்களாய்ப் பூத்திருக்கும் இந்தப்
பிரபஞ்சத்தில் என் தனிமை
ஆகக் கடைசி ரகசியம்,
என் கண்ணீர்த்துளி போலவே.

இந்த இரவில்
புலப்படாத தொலைவுகளில்
கண்ணீர்த்துளியாய் என் தனிமையும்
தொட முடியாத ஆழங்களில்
தனிமையாய் என் கண்ணீர்த்துளியும்
பிரம்மாண்டமாய் இடம் மாறிக்கொண்டிருக்கின்றன.

பிறகொரு நாள்,
நான் எழுதுவேன்,
துயரக்கனவொன்றின் சாயல்
படிந்திருக்கும்
இந்த இரவு பற்றி.

--கவிதா முரளிதரன்

பிரியம்

• நிலவின்
ரகசிய முகமும்
ராட்சச முகமும்
கடந்து
ஒளியின் ஓராயிரம்
மின்னல்களின் மடியில்
தவழ்ந்து கெண்டிருக்கிறது
எனது தேவதையின்
முதல் புன்னகையின் தரிசனம்.

• மீண்டும் முளைக்காத
முளைக்கவும் முடியாத
வண்ணத்துப் பூச்சிகள்
மின்னலென மறைந்த கணத்தின்
நினைவுகள்
எனைக் கிளர்த்திக் கிளர்த்தி
போதையூட்டுகின்றன.

• நான்
நுழைந்து கொண்ட பின்பு
தாமாகப் பூட்டிக்கொண்டு
எங்கோ ஒளிந்துகொண்டு விட்டன
சொற்களாளான இவ்வறையின் கதவுகள்.

• ஒரு
பனித்துளியிடம்
புகுந்துகொண்ட
என் உலகம்
தன்
சூரியனைத் தொலைத்துவிட்டுச்
சுற்றிக்கொண்டிருக்கிறது
வெறும் இருள் குகையாய்.

--agiilan

சலிப்பு

யாரும் புரிந்து கொள்ளவியலா?
ஜடமாகவே இருந்துவிடுகிறேன்
நான்……

காலம்
என் கைகளில்
திணித்துப்போன…
நிறமற்ற கனவுகள்…
எனக்குள்ளே மூழ்கிவிடட்டும்…

தேவதைகள்
யாருமற்ற எனது நிலத்தில்
சருகுற்று…
பேய்கள் வசிக்கட்டும்….

எப்போதேனும்…
கொலுசுகளோடு
வரும்
யாரோ ஒருத்தி
கண்டெடுக்கக் கூடும்…
சருகுகளினடியில்….
சிக்குண்டு போன…
யாரும்படிக்காத…
எனது புத்தகத்தின்…
இறுதிப் பக்கங்களை…..

--agiilan

agiilan.com

ஒரு நேசத்தின் மிச்சம் .

மனத்துவாரங்களில் கசியும் நேசத்தின் மிச்சம்

உன் வன்மங்களை அறியத் துணியவில்லை

நீயூட்டிச் சென்ற நஞ்சைப் புரிந்தபின்னும்

தேவதையென்றே புலம்புகின்றன

நிகழ்வுகள் அறியா உதடுகள்

கடவுச்சொற்கள் முதல்

அறையின் அலங்காரங்கள் வரையென

நிறைத்து வைத்திருக்குமென் காதலில்

இன்னும் கொஞ்சம் உயிர்

இருக்கத்தான் செய்கிறது..

இக்கடுங்குளிர்காலம் தாண்டியொரு கோடையில்

உனையேந்திய கடவுச்சொற்கள் போன்றே

காலாவதியாகியிருக்கலாம்

என் காதலும்..

--கோகுலன்

gokulankannan@gmail.com

கடற்பறவையின் தொழுகை

ஒவ்வொரு சமாதியின்

தலைமாட்டிலும் காலடியிலும்

கொப்பும் துளிரும் விட்ட

மஞ்சனாத்திமரங்கள்

இறப்பின் தருணங்களிலிருந்து

உயிர்ப்பிக்க எத்தனிக்கும்

காலம் மறநத சொல் ஒன்றை

தேடிக் கொண்டிருக்க

இலைகளில் படர்ந்த

வெற்று மெளனம் கலையத் துவங்குகிறது.

வராத தேவதை ஒன்றிற்காக

யாருமற்ற மணல் வெளியில் நின்று

நிரம்பவும் யாசித்து

கலுங்குப்பள்ளியின்

மினரா உச்சியில்

ஒளிநிரப்பிக் கொண்டிருந்த சுடர்

அலைகளின் நிழலில்

நீக்கமறக் கலந்து

பொழுதெல்லாம் காத்திருக்கிறது

கடலில் மிகவும் நீளமான பாய்விரித்து

திசையற்ற தொழுகையை

முடிக்க இயலாமல் கடற்பறவை

--ஹெச்.ஜி.ரசூல்

குட்டி இளவரசி வந்துவிட்டாள்..!!

டப்பியின் களிப்புகளைப் பரப்பி வைப்பாள்/

சுவற்று அழுக்கை ஈயெனப் பிடிப்பாள்/

கூக்கூவைத் தினம்தினமும் புதிதாய்க் காண்பாள்/

மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுவாள்/

ஏறி இறங்கும் படிகள் அவள் உலகம்/

பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள்/

பசி உடல் தவிர அழ ஒன்றும் இல்லை/

தனக்குள்தானே பொங்கும் மகிழ்ச்சி அவள்/

ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியின் தொடர்ச்சியே/

பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பாள்/

அவள் ஊடுருவல் பார்வை உம்மையும் மீறிச் செல்லும்.

---ஆத்மநாம்

வளர்ந்தவர்களான நமக்குக் குழந்தையாகிற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் குழந்தைகளின் உலகைக் கவனித்த கவிதை இது. நாமும் குழந்தையாக இருந்தபோது இப்படித்தானே இருந்திருப்போம். சொல்லோடுதான் இப்போதைய குழப்பங்களும் துயரங்களும் நம்மிடம் வந்தனவா?

என் வனம் என்னிடம்..

தலைவன்களும் பல்லக்கத்தூக்கிகளுமாய்
ஊர்வலங்களால் அலங்கரிக்கப்பட்ட ஊரிலிருந்து
இவ்வனத்திற்குள் வந்து நாட்கள் பலவாகியிருந்தன

வனம் நிறையப்புற்களோடும் கொஞ்சம் மான்களோடும்
அழகாயிருந்தது.
தேன்சொரிந்தாலும் காய்கனிந்தாலும் வந்துபோக
பட்டாம்பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும்
அங்கே சுதந்திரம் இருந்தது.

இயற்கையின்மொழி இதயமெங்கும்
கவிதைகளை நிறைத்துக்கொண்டிருந்தபொழுதில்
அவன் தயங்கித் தயங்கி வந்து நின்று
தானுமொரு வனம்விரும்பி என்றான்
வனம்விரும்பிகளின் ரட்சகன் என்றான்
மொழிக்காதலனுமென்றான்
நான் வனம் நிறைத்திருந்த கவிதைகளை
அவனுக்குச் சொல்லலானேன்
பூக்களில் தேன் சொரிந்திருந்தும்
அன்று பட்டாம்பூச்சிகள் வருகையை நிறுத்திக்கொண்டன

தன்பரப்பில் வாழும் உயிர்களுக்கான
வனச்சுனையின் பேதமற்ற நீரளிப்பை
நெக்குருகிச் சொல்லிக்கொண்டிருந்தபோது
தலையைச் சிலுப்பிக்கொண்டே
"இப்படித்தான் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்
அல்லது பேசிக்கொண்டிருப்பதே நம் பண்பாடு"
தன் அபிமான நடிகன்கூட
ஒருபடத்தில் அப்படித்தான் சொல்லியிருக்கிறான் என்றான்
பறவைகள் அக்கணம்
வனத்திற்கெதிரான திசையில் பயணிக்கக் கண்டேன்

தானென்பதழிந்து தன்னை உலகினுக்கு வழங்கும்
கனியீன்ற வனமரங்கள் காட்டினேன்
நேற்றைய மயில்களின் நடனத்தைச்சொல்லும்
உதிர்ந்த தோகைகளின் குறிப்புகளையும்கூட
பைகளில் பழங்களை நிரப்பிக்கொண்டவன்
கக்கத்தில் சொருகிய மயில்தோகைகளுடன்
சந்தையில் நல்ல விலைபோகுமென்றான்
முகில்களோ, மான்களோ எதுவும்
தட்டுப்படாத வெறுமை சூழந்தது

அவனுடனான உரையாடலில்
என் சொற்கள் தீர்ந்துபோன சமயத்திலும்
அவன் பேசிக்கொண்டிருந்தான்
தான் இச்சமூகத்துக்கு
ஏதேனும் செய்தே தீருவேன் என்றான்
கலைரசிகர்கள்
வனம்வாழ்வது தகாதென்றான்
இலக்கியம், கலை, மொழிபரப்புதலில்
தானொரு தலைவனாவதற்கு
ஆட்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்
தன்பின்னே வந்தால் எதிர்காலம் சிறக்குமென்றும்
தன்னைச் சுமப்பவர்களுக்கு மிகவும் விசுவாசமானவனென்றும்
இடைவெளிகளற்றுப் பேசிக்கொண்டேயிருந்தான்


மௌனத்தை மொழிபெயர்க்கத் தெரியாதவன்
பதிலுக்கு நச்சரித்தபோது நான்
நோய்க்கூறுகள் உருவானது இப்படித்தானென்றேன்
அவன் கோபம் கொப்பளிக்க என்னை
ஒரு சமூகத்துரோகியென முடிவுசொல்லி விடைபெற்றிருந்தான்
ஒரு நீள இரவு கடந்து
விழித்துக்கொள்கையில்
மழைபெய்திருந்தது
மான்கள், பறவைகள் எல்லாம் இருந்தன
என் வனம் என்னிடம் திரும்ப வந்திருந்தது

பெங்களூரு நாட்குறிப்புகள் ....!

இந்த நீண்ட மழைக்காலம் ஏமாற்றம் தருவதாக இருக்கிறது .

ஒற்றனைப் போல ரகசியமாக வந்து செல்கிறது மழை.

இதில் பகலெனப் படுவது
அலுவலகக் கணினிக்கான காலமாக இருக்கிறது

இரவெனப் படுவது வீட்டுக் கணினிக்கு உரியது

இங்கு தெருவானது ஒரு வாசலில் தொடங்கி
இன்னொரு வாசலிலேயே முடிந்து விடுகிறது.

இதில் வாழ்வெனப் படுவது சுழலும்
ஓர் வெற்றுக் கனவு..!
படகில்
நீரில் அலையும் ஈரக்கால்கள்

பசியால் மங்கும் முகங்கள்

அவளுக்கும் விதிக்கும் இடையிலான ஊசலாக
என் இதயம்

அவள் கண்களிலிருந்தும்

அவள் கைகளிலிருந்தும்

என்னைப் பிரித்தது எது

துயரத்தை கண்ணீர் மறைக்க

பெய்யும் மழைக்கும்

ஜன்னலுக்கும் அப்பால்

அவள் நிற்கிறாள்

'இரு, நானும் உன்னுடன் வருகிறேன்' என்று
சொல்ல முடியாமல்.
----ஓட்டிரோ சில்வா
வெனிசூலாவை சேர்ந்த இடதுசாரிக் கவிஞர்

உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்..!

"உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்.
ஆளரவமற்ற இருட்புலத்தில்
அவர்கள் புதைக்கப்பட்டனர்.
யாரும் கண்ணீர் சிந்தவில்லை.
யாரோ அவர்களைக்
கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
அவர்தம்
புகழ்வாய்ந்த பெயர் கூறிட
அங்கே சிலுவையோ...
சமாதியோ... மண்டபமோ
ஏதுமில்லை.
புல் முளைத்திருக்கிறது அங்கே.
தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று
அந்த இரகசியத்தைத் தாங்கியிருக்கிறது.
கரை மீறிச் சீறியடிக்கும்
அலைகள் மட்டுமே சாட்சியம்.
வல்லமை வாய்ந்த
அவ்வலைகள் கூட
தொலைதூர இல்லத்துக்கு
செய்தியைக் கொண்டுபோக முடியாது..."

----வி.என்.ஃபிக்னர்

கடவுளர்களின் அலுவலகம்













வேலை முடிந்த நாளொன்றின்
களைத்துப் போன
புறநகர் ரயில் பயணமொன்றில்
விழிப்பிற்கும் உறக்கத்திற்கும்
இடையேயான கனவொன்றிலிருந்து
பலவந்தமாய் மீள வேண்டியிருந்தது
தொங்குங் கம்பியைத்
தொலைத்து விடாமலிருக்க ..

தூக்கம் துரத்த
ஏதாவது யோசித்திருக்க
சிக்கினார்
அன்றும் கடவுள் கைகளிலே ..

எத்தனை வேலைக ளவருக்கு
சொந்தத் தொழிலா
சம்பளமுண்டா
உயரதிகாரிக்கு பயப்படுவாரா
தான் வருமுன்னே
வந்துவிடக் கூடாதவரென
வேண்டியதுண்டா
விடுப்புக்கு விண்ணப்பிப்பாரா
பயணத்திற்கு மூன்று மாதம் முன்பே
பதிந்து வைப்பாரா
ஊதிய உயர்விற்கு
சண்டை போடுவாரா

பதில் தெரியாத
தொடர் கேள்விகளின் முடிவில்
அவர் ஒருவர் தானா
இல்லையெனில் எங்கிருக்கிறது
கடவுள்களின் அலுவலகம்
புதிய கேள்விகள்
நிறுத்தத்தில் நின்றன .

ஒரு நாளின்
எட்டு மணி நேரம் மட்டுமே
நான் செய்யும்
கூட்டல் கழித்தலிற்கே
சுளுக்கிக் கொள்ள

பல நூறாண்டுகள் தாண்டியும்
படைத்துச் சலிக்க
ஒருவரல்ல கடவுள்
பெயர்களெழுத
பயணச் சீட்டின்
பின்பக்கமாவது தாண்டும்

எனக்குத் தெரிந்த
கடவுளர்களின் பெயர் பற்றி
யோசித்துக் கொண்டே
நிலையம் தாண்டும்
மந்தையினூடே ஊர்கையில்
சாலையோரம் படுத்த படி
பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்
பெயர் சொல்ல விரும்பாத
ஒரு கடவுள்

--Rejovasan

Rejovasan.com

பெருந்துயரின் பேரலை

அன்புமயமாக

நீ எழுதிக் கொண்டிருந்த கவிதையை

பாதியிலேயே நிறுத்திவிட்டு

பறந்து போய்விட்டாய்

ஒரு பட்டாம்பூச்சியைப் போல.

வார்த்தை பேச்சு எழுத்து

எதிலும் அடக்கிச் சொல்லமுடியாத

பெருந்துயரம் பேரலையாய் எழுந்து

இதயத்தை முட்டித் தள்ளுகிறது.

ஆறுதல் கொள்வதற்கு

திரும்பவும் உன் பெயரை

உச்சரித்துக் கொள்கிறேன்

கண்மணிகளைக் காப்பாற்றிக் கொண்டிருந்த

இமையொன்று உதிர்ந்து வீழ்ந்தது.

கண்ணீர் சிந்த சக்தியற்று

சப்தநாடியும் உறைந்து போக

அழுதுபுரண்டெழும் ஞாபகம்

உன் முகமும் உன் மனசும்

உயிரைத் தாண்டிவந்து

என்னோடு பேசிக் கொண்டிருக்கிறது.

-- ஹெச்.ஜி.ரசூல்
mylanchirazool@yahoo.co.in

போர் ரசிகன்...

போர் பற்றிய
மிக சமீபத்திய
செய்திக்காகக்
காத்திருக்கிறேன்

என் வான்வெளியில் அல்ல
விமானங்கள் சீறுவது
என் தெருவில் அல்ல
குண்டுகள் விழுவது
நொறுங்கித் தரைமட்டமாவது
என் வீடுமல்ல

அகண்ட இப்பிரபஞ்ஞத்தில்
கவனமாய்க் கறாராய்
வகுக்கப்பட்ட
எல்லைகளினுள்
அபாயங்களுக்குத் தப்பி
அரண் கொண்டிருக்கிறது
என் இருப்பு
என் கோப்பைத் தேநீருடன்
என் இருக்கையில்
ஓய்வாய் அமர்ந்து
தினசரியின் ஒரு வரியை
சாதாரணமாய்க் கடந்து விடுகிறேன்

அவ்வரியில் குண்டடிபட்டு
சில நூறுபேர்
இறந்திருக்கிறார்கள்
எந்த நியாயமுமின்றி
ஒரு குழந்தை தகப்பனையோ
சிசுவொன்று முலையூட்டும் தாயையோ
இழந்துவிட்டிருக்கிறது

யாரோ ஒருவர்
சகோதரனையோ
கணவனையோ
பிள்ளையையோ
இழந்து கதறுகிறார்

நாடகமென போர் நிகழும்
ஊடகங்களின்
அபிமான ரசிகன் நான்

மயக்கும் வண்ணத்திலும்
வாசனையிலும்
பெருகி வழிகின்றன
போர்ச் செய்திகள்

சிதறும் தசையும்
ஒழுகும் ரத்தமும்
இடையறாது ஆர்வமூட்ட
அடுத்த அங்கம் எதுவோயென
ஆவல் கொள்கிறேன்

மரவள்ளிக் கிழங்குகளைத்
தோண்டியெடுப்பது போல்
மண்ணிலிருந்து தன் குழந்தைகளின்
உடல்களைத் தோண்டியெடுக்கிறான்
ஒருவன்

தன் அம்மண மேனியில்
குண்டு சிதறிய காயங்களோடு
அழுதுகொண்டிருக்கிறது
ஒரு குழந்தை

போர்ச்சிதிலங்கள் மீது
விளையாடுகின்றனர்
இன்றைய தினத்துக்குத்
தப்பிவிட்ட சிறுவர்கள்

குண்டுகளை விசிறிச் செல்கிறது விமானம்
புகையெழும்பி மூடுகிறது
தொலைக்காட்சித் திரையை

இன்று கொல்லப்பட்டவர்கள்
எண்ணிக்கையைச் சொல்லி
செய்தி வாசிப்பவன் முடிக்கையில்
என் கடைசி மிடறு
தேநீரை உறிஞ்சுகிறேன்

இனிப்பாயும் இருக்கிறது
ரத்தத்தின் சுவை

(‘பிஷப்புகளின் ராணி’ தொகுப்பிலிருந்து)


இயலாமையின் தொலைவிலிருந்தபடி,
போரால் இன்னலுறும் எம் ஈழத் தமிழ்ச் சோதரர்களுக்கு....

வாழும்படிதான் இருக்கிறது வாழ்க்கை.

ஓடிக்கொண்டேயிருக்கிற நதி
போய்க்கொண்டேயிருக்கிற மேகம்
தினம் பூக்கிற மரம்
பறந்து திரிகிற வண்ணத்துப்பூச்சி
குரலெழும்பாமல் இசைக்கிற காற்று
வீடு முழுக்க வானம்
வானம் நிறைய பறவைகள்
அருகே, மிக அருகே
தொட்டுக்கொள்ளும் தூரத்தில்
என்றில்லாவிடினும்
என் குரல் கேட்கிற தொலைவில் நீ
இது போதும்,
இவை போதும்
வாழும்படிதான் இருக்கிறது -
வாழ்க்கை.

இது இப்படித்தான் இருக்கும் என்கிறது அன்பு. .....

இது
தேவையற்றது
நேரத்தை
வீணடிப்பது
என்கிறது
அறிவு

இது
இப்படித்தான் இருக்கும்
என்கிறது
அன்பு

ஏமாற்றங்களின்
மாயாஜாலம்
இது
நம்பமுடியாதது
என்கிறது
தீர்வு

இது
துன்பங்களின்
பதுங்குகுழி
சித்திரவதைகளின்
முகாம்
என்கிறது
பயம்..

இது
பார்வையற்ற
பார்வை
என்கிறது
விழிப்பு

இது
இப்படித்தான் இருக்கும்
என்கிறது
அன்பு

இது
சின்னத்தனமானது
நிஜமற்றது
என்கிறது
சுயம்

இது
இலகுவானதல்ல
நெருப்பில்
நடனம்
என்கிறது
எச்சரிக்கை

இது
ஆபத்தானது
சுயத்தைக்
கொல்வது
என்கிறது
அனுபவம்

இது
இப்படித்தான் இருக்கும்
என்கிறது
அன்பு.
.....

தீக்குளிக்கும் முன்பு முத்துக்குமார் அளித்த மரண வாக்குமூலம் - முழு விவரம்

சென்னை: தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை, கிட்டத்தட்ட அவரது மரண வாக்குமூலமாக அமைந்துள்ளது.

முத்துக்குமார் விநியோகித்த துண்டு அறிக்கையின் முழு விவரம்:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.

அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை.

தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா?

கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!).

பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?

ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன்.

உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.

போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!

விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!

ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.

'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.

என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமிழழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா?

சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம்.

ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.

மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.

டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப் போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.

ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.

தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.


அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது.

ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா?

இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?

ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எஅடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது.

சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது.

ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது?

புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்?

தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா.

ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா.

ஆயுத தளவாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!

இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?

அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.

அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும் கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99.

அறிந்த நிரந்தரம்

ரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு.
இரவெனும் கருப்புச் சூரியன்
வழிக் குகையில் எங்கோ சிக்கித் தவிக்கிறது.
நெட்டித் தள்ளியும் நகராத காலம்
எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது.
அரைத் தூக்கத்தில் விழித்த காகம்
உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்
கேட்காமல் மறதியில் கரைகிறது.
இதோ வந்தது முடிவென்ற
சாமச் சேவலின் கூவல்
ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக.
இரண்டாம் தஞ்சம்
பொய் முகம் உலர்ந்தன ஏரிகள்.
நாதியற்றுப்போன நாரைகள்
கால்நடைகளின் காலசைப்பில்
கண் வைத்துக் காத்திருக்கும்.
எப்பொழுது பறக்கும் வெட்டுக்கிளிகள்?
தன் புதிய அறைச்சுவர்களுடன் கோபித்த
மனிதன் ஒருவன்
ஒட்டடை படிந்த தலையுடன்
வாசல் திறந்து வருகிறான்
கோதும் விரல்களிடம்.
காயும் நிலவிலும் கிராமக் குடிசை
இருள் மூலைகள் வைத்திருக்கும்
மறக்காமல்
மின்மினிக்கு.
வாழும் பிரமைகள்
காலம் அழிந்து
கிடந்த நிலையில்
கடல் வந்து போயிருக்கிறது.
கொடிக்கம்பியும் அலமாரியும்
அம்மணமாய்ப் பார்த்து நிற்க
வாசலில் மட்டும் பாதம் தட்டி உதறிய மணல்.
நினைவின் சுவடாய் உதட்டில் படிந்த கரிப்பும்
காற்றில் கரைந்துவிட
வந்ததோ எனச் சந்தேகம் கவியும்.
பெண்ணுடல் பட்டுக் கசங்கிய ஆடைகள்
மறந்த மனதின்
இருண்ட மூலைகளினின்று
வெளிப்பட்டு
உடல் தேடி அலைவதால்
எங்கும் துணியின் சரசரப்பு.
அன்று பக்கவாட்டில் நடந்து வந்த மஞ்சள் நிலா
தசைகளின் சுடரை
நகல் எடுக்க முயன்று
கோட்டுக் கோலங்களைச் செதுக்கியது.
இறந்த நாள்களின்
குளிர் நீளக் கைகள்
நீண்டு வந்து
மறதியைக் கொண்டு தூர்த்துவிட
கற்பனைக்கும் சொந்தமில்லை
கோலங்கள்.

---shibli

என்னையும் என்னுள் கவிதையையும் தேடாதீர்கள்

சிந்தைக்கும்
காட்சிகளுக்கும்
முரன்பாடென்பதால்
கனவுகள்
தள்ளியே
நிற்கின்றது

தனிமையின்
பசிக்குள்
இரவுகள்
விழுங்கப்பட
தூக்கம்
தொலைத்ததை
தேட
நினைக்கையில்
விடிகிறது
காலை

நீழும்
வாழ்வின்
தொடர்கதைகள்
கற்பனையைத்
தின்று
உயிர்வாழ்கிறது

நாளை
எப்படி
இருக்கப்போகிறது
என்பதை
இன்று
தேடுவதிலேயே
இன்று
எப்படி
இருந்ததென்பது
மறந்துபோகிறது

சந்தித்து
சலித்துவிட்ட
வாழ்வுடன்
நட்புக்களும்
.
.
இருத்தலின்
பிடிப்பை
இழந்துவிட்ட
இருப்பு.
.
இன்றும்
கவிதைக்குள்
என்னையும்
என்னுள்
கவிதையையும்
தேடாதீர்கள்
...

புலிகளின் வேட்டை

மானுட வேட்டை போலில்லை
புலிகளின் வேட்டை.
அச்சுறுத்தலின்றி அவை
தூக்குவதில்லை தம் நக ஆயுதங்களை.

புலிகள் அமைதி விரும்புபவை...
தனித்து இருப்பவை...
தனக்கென எல்லைகள் வகுத்துக் கொள்பவை...
தன் எல்லை தாண்டி வராது
புலிகள் எப்போதும்...
புலிகளுக்கும் உண்டு
எல்லை தாண்டா இறையாண்மை

புலி இனம் அழிந்து வருவதாக
யாரும் சொன்னால்கூட நம்பாதீர்கள்...
காடுகளின் கம்பீரம் புலிகள்.
புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.

சிங்கமும் புலியும்
ஒரு வனத்தில் வாழ்வதில்லை.
சிங்கமும் புலியும்
ஒரு போரில் மோதுவதில்லை.
மோதினால்...
புலிதான் வெல்லுமென்கிறது
வனங்களின் வரலாறு.

-தாமிரா