எழுத்தாளனை கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.எனக்கு தெரிந்த அளவில் மற்ற துறையினர் யாரும் இந்த அளவுக்கு சமூகத்தை குறை சொல்பவர்களாக இல்லை.அதை ஒரு வாதத்திற்கு சரியென்றே வைத்தாலும் ஒரு சமூக அமைப்பில் மற்ற தொழில் செய்பவர்களின் நிலை என்ன என்ற கேள்வி வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு உதாரணத்திற்கு நான் சார்ந்திருக்கிற மென்பொருள் துறையை எடுத்துக்கொள்வோம்.
இந்த சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை மென்பொருள் துறை வழங்கி வருகிறது.அதை வெறும் பொருளியல் தளத்தில் வைத்து மட்டும் அல்ல மற்ற தளங்களில் அதன் பயன்பாட்டை,வீச்சை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமூகத்தின் அனைத்து பிரிவினரும் அனுபவித்து வருகிறார்கள்.
இதன் நேரடி பயன்பாடுகள் என்ற அளவில் எல்லா கட்டணங்களும் இன்று online முறைக்கு விட்டார்கள். பயன்பாடுகளை கொஞ்சம் பார்ப்போம்.
- மின்கட்டணம்
தமிழக அரசின் இந்த முயற்சியை பாராட்டுகிற இவ்வேளையில் இதற்க்கு பின்னால் உள்ள கண்ணுக்கு தெரியாத மென்பொருள் துறையினரின் உழைப்பை கொண்டாடாத சமூகம் உருப்படாது :)
- தொடர் வண்டி பயண முன்பதிவு, வங்கி நடவடிக்கைகள்
மளிகைக்கடை முதல் மாட மாளிகைகளைக் கட்டும் கட்டிடத்துறை வரை தொலை தொடர்பு முதல் தொ(ல்)லைகாட்சி வரை !
பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை என்று கருவறை முதல் கல்லறை வரை மென்பொருள் துறையினரின் உழைப்பை இந்த சமூகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது ஆனால் இதற்காக மென்பொருள் துறைக்கென ஒரு நாளை ஒதுக்கி விழா எடுக்க மனம் இல்லை,மாறாக நமக்கு இந்த சமூகத்தில் கிடைக்கும் அவப்பெயர்கள்,அவமானங்கள்,அவமரியாதைகள்தான் ("அ" வில் வேறு வார்த்தைகள் இருந்தாலும் சேர்த்துக்கொள்ளவும்) எத்தனை எத்தனை !!
- நாங்கள் ( மற்ற துறையினர்) ஒரு ஆண்டு சம்பாதிப்பதை இவர்கள்(மென்பொருள் துறையினர்) ஓரிரண்டு மாதங்களில் சம்பாதிக்கிறார்கள்.(இதற்கு காரணம் பண மதிப்பு, நாங்கள் அல்ல அய்யா)
- வகை தொகையின்றி செலவு செய்யும் ஊதாரிகள்.(ஏன் மற்ற துறையில் இருப்பவர்கள் யாரும் ஊதாரித்தனமாக செலவு செய்வதில்லையா? ஊதாரித்தனம் என்பது ஒரு குணநலன் என்றுதான் நாம் கேள்வி பட்டிருக்கிறோம் ஆனால் அது ஒரு துறை சார்ந்த விடயம் என்று இவர்கள் "கண்டு"பிடித்துள்ளார்கள் (வாழ்க!,தொடர்க!)
- வீட்டு வாடகை முதல் காய்கறி வரை விலை ஏறுவதற்கு காரணம் நாம் தான் ( ஐயாயிரம் பெறாத வீட்டை பனிரெண்டாயிரம் வாடகை சொல்லும் வீட்டு உரிமையாளர்களின் பேராசையை பற்றி இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்)
- விழாக் காலங்களில் பொங்கி வழியும் போக்குவரத்திற்கு காரணமும் நாமே.(தெரியாமல் தான் கேட்கிறேன் வளர்ச்சியைப் பரவலாக்காமல் எல்லாவற்றையும் சென்னை,பெங்களூர்,ஹைதராபாத் என்று பெரு நகரங்களில் எல்லா நிறுவனங்களையும் அமைத்து (குவித்து)விட்டு பின்னர் அதற்கான போக்குவரத்து.அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்காமல் இருப்பது இந்த அரசின் குற்றமா இல்லை அது எம் குற்றமா? (மனோகரா பாணியில் வாசிக்கவும்))
- இவர்களால் தான் கலாச்சாரம் கெடுகிறது குடித்து விட்டு கூத்தடிக்கிறார்கள்( குடிக்காத,கூத்தடிக்காத மற்ற துறை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் அய்யா அத்தோடு இதைப்பற்றி எழுதவதை நிறுத்திவிடுகிறேன்)
முடிவாக இவ்வளவு ஏச்சு பேச்சுக்களையும் இழி மொழிகளையும் தாங்கி எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்களாக வருவோம்.
வாழ்க மென்பொருள் துறை!! வளர்க்க அதன் புகழ்!!
மேரா சாப்ட்வேர் மகான் !! என்றே சொல்லுவோம் !! பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் !!!
இந்த 2011 ஆம் ஆண்டை மென்பொருள் ஆண்டாக அறிவிக்க வேண்டும் என நடுவண் அரசைக் கோரி நிறைவு செய்கிறேன் :)
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!