Sunday, December 13, 2009

பெருந்துயரின் பேரலை

அன்புமயமாக

நீ எழுதிக் கொண்டிருந்த கவிதையை

பாதியிலேயே நிறுத்திவிட்டு

பறந்து போய்விட்டாய்

ஒரு பட்டாம்பூச்சியைப் போல.

வார்த்தை பேச்சு எழுத்து

எதிலும் அடக்கிச் சொல்லமுடியாத

பெருந்துயரம் பேரலையாய் எழுந்து

இதயத்தை முட்டித் தள்ளுகிறது.

ஆறுதல் கொள்வதற்கு

திரும்பவும் உன் பெயரை

உச்சரித்துக் கொள்கிறேன்

கண்மணிகளைக் காப்பாற்றிக் கொண்டிருந்த

இமையொன்று உதிர்ந்து வீழ்ந்தது.

கண்ணீர் சிந்த சக்தியற்று

சப்தநாடியும் உறைந்து போக

அழுதுபுரண்டெழும் ஞாபகம்

உன் முகமும் உன் மனசும்

உயிரைத் தாண்டிவந்து

என்னோடு பேசிக் கொண்டிருக்கிறது.

-- ஹெச்.ஜி.ரசூல்
mylanchirazool@yahoo.co.in

No comments:

Post a Comment