Sunday, December 13, 2009

இது நதியின் நாள்

துளிதுளியாய்ச் சிதறும்
பரவசங்களை
நனைந்த என்
குட்டைப் பாவாடை முழுக்க
அள்ளிச் சேமிக்கிறேன்
ஒவ்வொன்றாய்ச் சிதறாமல்

பூமியின் முலைகளில்
ஊற்றெடுத்து வழியும்
வெண்மையின் பாலில்
என் பாவங்களை
கழுவித் துவைத்து உலர விடுகிறேன்.
ஓடிக்கொண்டே இருக்கும்
என் உற்சாக நதியில்
பானங்களை அள்ளிப் பருகுகிறேன்.
தரிசாகக் கிடக்கும்
மனவெளியில்
விதைகளை விதைத்து
மழையைப் பெய்விக்கிறான்
பசுமையின் சொந்தக்காரன்.
ஓர் அழகிய இசை
ஆடைகளைக் களைந்துவிட்டு
கை, கால்கள் முளைத்து
நடனமிட்டு ஓடுகிறது
நிர்வாணமாய்.
பரந்த வெளியின் பறவைகள்
தங்கள் காதலனின் பெயரை
உரக்கக் கத்தியபடி
பாடி விரைகின்றன.
மொத்தமாய்ச் சேர்த்த
கனவுகள் வெடித்து
பூமியெங்கும் சிதறட்டும் இன்று.

இது நதியின் நாள்
இது அருவியின் நாள்
இது வனாந்தரத்தின் நாள்
இது எனது நாள்


----பெண்ணியா (இலங்கை)

No comments:

Post a Comment