Sunday, December 13, 2009

உன் கவிதைகளை நான் முற்றிலும் வெறுக்கிறேன்

உன் கவிதைகளுக்கு என்னிடம் பொறுமையில்லை
சரம் வெடிப்பது போலிருக்கிறது
எனது அன்றாடம்
சோகம் சொட்டும் வரிகளுக்கிடையில்
சில மணித்துளிகளல்ல
பல யுகங்கள் கடந்து விடுகின்றன

உன் கவிதைகளுக்கு என்னிடம் நேரம் இல்லை
மேசையை நிறைத்திருக்கும் இன்று
எனது மாலையையும்
இரவையும்
விழுங்கப் பசித்திருக்கிறது

உன் கவிதைகள் எனக்குப் பிடிக்கவில்லை
அவை நெருஞ்சி முள்ளைப் போல்
குத்துவதும் அல்லாமல்
நிரந்தரமாய் நின்று உறுத்துகின்றன

அழகியல் உனக்கு சுத்தமாய் தெரியவில்லை
உன் கவிதைகள் அசிங்கமாய்
சீழ் நிறைந்த சிறு புண்களாய் வீச்சமடிக்கின்றன

உன் கவிதைகளை நான் முற்றிலும் வெறுக்கிறேன்
ஏன் தெரியுமா
அவற்றை
நீ எழுதினாய்
நான் வாழ்கிறேன்

No comments:

Post a Comment